Monday, February 16, 2009

சொல்லவும் வேண்டுமோ?

கண் நடிக்கும் என்றே நாம் பார்த்து நிற்போம்
கை நடிப்பைப் பார்ப்பதற்கு விட்டுப் போகும்
பண்ணிசைக்கு வாயசைக்க பார்த்திருந்தால்
பாடியது அவரேதான் என்று தோன்றும்
விண்ணவரின் வேடத்தில் அவரும் வந்தால்
விண்ணவர்க்கோ வியப்பினால் இமை துடிக்கும்
கண்ணவரே எங்களது திரைத் துறையின்
கடவுளே சிவாஜி கணேசனன்றோ

நடிப்பிற்காய் அவன் ஒருவன் தன்னை மட்டும்
நற்றமிழ்த்தாய் ஈன்றெடுத்தாள் இன்று வரை
படிக்கின்றார் அவ்னைத்தான் அவனின் வழி
படிப்பாரே கொஞ்சம் கொஞ்சம் நடிக்கின்றார் காண்
துடிக்கின்ற கன்னங்கள் விழியிரண்டு
துள்ளி வரும் நடையழகும் மென்னடையும்
வடித்திட்ட வளர் தமிழான் சிவாஜி என்னும்
வள்ளல் அவன் வழங்கியதில் வாழ்கின்றாரே

ஒவ்வொரு அசைவும் நமது உயிரினைக் கொள்ளை கொள்ளும்
அவ்விரு விழிகள் பேசும் ஆயிரம் மொழிகள் தன்னை
செவ்விய தமிழோ அவனால் சிறப்புகள் கோடி கொள்ளும்
சிறு நடை நடந்தால் கூட சிங்கமே ஒதுங்கிக் கொள்ளும்
எவ்விதம் இவனால் மட்டும் இத்தனை முடியும் என்று
அவ்விய நெஞ்சத்தாரின் அழுக்காறு அவரைக் கொல்லும்
பவ்வியம் காட்டும் போதும் பல விதம் காட்டி நிற்கும்
பல்கலைக் கழகம் எங்கள் பார் புகழ் சிவாஜி அண்ணன்

மறைந்து விட்டான் மா கலைஞன் என்று இந்த
மனிதர்களும் புலம்புகின்றார் புரியாராகி
நிறைந்து விட்டான் நற்றமிழர் நெஞ்சிலெல்லாம்
நீங்காத புகழ் கொண்ட மேலவனாய்
சிறந்து நிற்பான் என்றென்றும் தமிழர் நெஞ்சில்
சிவனாகிச் சிவாஜியாய் எங்கள் அண்ணன
கலந்து விட்டான் அறிஞர்களின நெஞ்சில் எல்லாம்
கலையுலகத் தலைமகனாய் வாழுகின்றான்

நன்றி -
சிவாஜி ; ஒரு எழுதி முடிக்கப்படாத கலைக் காவியம்

அண்மையில் ஜெயமோகன் என்ற குறுக்குவழியில் புகழ் பெறுவதில் நம்பிக்கை உடைய ஒரு அரைகுறை எழுத்தாளர் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் பற்றி, அவர்களின் திரைப்படங்கள் பற்றி விமர்சித்திருந்தது குறித்து விகடன் அதை துணிவுடன் பதிவு செய்திருந்தது. அதை பதிவு செய்திருந்த தன்மை குறித்து பிந்தைய வாரத்தில் சுய விளக்கமும் அளித்திருந்தது.

சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் பற்றிய திருவாளர் ஜெயமோகன் அவர்களின் விமர்சனம்(?) குறைத்து மதிப்பிடப் பட முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் மேற்குறிப்பிடப் பட்ட இருவரும் திரைத் துறையை மட்டுமின்றி, தமிழ்கூறும் நல்லுலகையே குறிப்பிட்ட காலம் வரையில் தங்களின் பிடியில் வைத்திருந்தவர்கள் என்கிற உண்மை தமிழர்கள் அனைவரும் அறிந்ததே.

அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல இன்னுமொரு உண்மை;

இந்த மண்ணுடல் விட்டு .இறந்து வானுலகெய்தவர்களை விமர்சிப்பது நமது தமிழ் கலாச்சாரத்திலே அத்து மீறல் அல்லது கலாச்சாரக் கேடு’.

ஆனால் இந்த சின்ன விசயம் கூட அறியாத பெரிய எழுத்தாளர் பேப்பர் மேல பேனா போட்டுஎப்படி இவ்வளவு பெரிய விசயத்தை எழுதலாம்?அதிலும் பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உட்கார்ந்திருக்கும் நடிகர் திலகம் பற்றி என்றவுடன் நம் கோபத்திற்கு கேட்க வேண்டுமா?

இதற்கு உடனடியாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது மட்டும் போதாது என்பதாலும், அந்த கலைக் குறிசில் பற்றிய சில தகவல்களை பகிர்ந்து அல்லது பரிமாறிக் கொள்ளவுமே இந்த கட்டுரை.

சிவாஜி !

சொல்லும்போதே ஒரு கம்பீரம் !

அந்த கம்பீர உருவம் காட்டிய கட்டியங்கார வித்தைகள் எத்தனை ?

அந்த ஒற்றை நாக்கிலிருந்து கிளம்பிய வித்தியாச சப்தங்கள் எத்தனை ?

அந்த ஒற்றை தொண்டை கிளப்பிய ஏற்ற இறக்க குரல் ஜாலங்கள் எத்தனை எத்தனை?

எப்படி இன்னும் கூட பரிமேலழகர் முதல் சுஜாதா வரை உரை எழுதிய பின்னும் திருக்குரல் புதியதாகவே தெரிகிறதோ, அப்படி சிவாஜியின் கலைதிறன் நாளைய தலைமுறைக்கும் புதிதே !

எப்படி எல்லாத் தலைமுறைக்குமுரிய கருத்தைச் சொன்ன திருவள்ளுவன் மனித மகனாக இருக்க முடியாது என்ற சந்தேகம் இன்னும் இன்றைய தலைமுறை வரை தொடர்கிறதோ, அப்படியேதான் ஏற்றுக் கொண்ட எல்லா பாத்திரங்களையும் தானாகவும், தானே அப்பாத்திரங்களாகவும் தோன்ற வைக்க முடியுமென்ற அந்த ஒரு அசாதாரண நடிகன் மனித மகனாக (அவர்தான் தெய்வ மகனாச்சே) நிச்சயம் இருக்க முடியாது.

நடிகவேள் ராதாவின் வாரிசு ராதாரவி ஒரு பேட்டியில் அவர் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரி சிரிப்பார்;பேசுவார்;நிற்பார்நடப்பார். இது எல்லோரும் அறிந்ததே. ஆனால் அவர் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரி சொறிவதைப் பார்த்து நான் அசந்திருக்கிறேன்என்று சொன்னார். இது எப்படி இருக்கு?

சிவாஜியின் படங்களிலேயே நாலு அஞ்சு படம்தான் நல்ல படம் என்று கூடத்தான் ஒரு கருத்தை படிக்க நேர்ந்தது. நாலு அஞ்சு நல்ல படம் நடித்தவருக்கா

1962-ல் கலைமாமணி,

1966-ல் பத்ம பூஷண்,

1986-ல் டாக்டர் பட்டம்(அண்ணாமலை பல்கலைக் கழகம்),

1995-ல் செவாலியே,

1997-ல் தாதா சாகேப் பால்கே விருதும்,

தேசிய விருது – 19 படங்கள்,

தமிழக விருது – 5 படங்கள்,

அவரது பெயரில் இந்திய அரசு தபால் தலையும் வெளியிட்டும் உள்ளது?

ஜெயமோகன் மாதிரியான சில எழுத்தாளர்களின் (சாரு நிவேதிதா,கோணங்கி) வார்த்தைப் பிரயோகங்கள் அவர்களுக்கே புரியாது என்பது வேறு விஷயம். அதை விட்டு விடுங்கள். படிக்கிறவங்களின் நிலையை யோசியுங்கள் ? ஒரு பக்கம் தாண்டவே உயிரைக் கொடுத்து படிக்க வேண்டி இருக்கும். ஒரு மனுஷனுக்கு ஒரு உசிருதானே இருக்கு?